இவ்வுலகில் அனைவரின் வாழ்க்கையிலும் நடைபெறும் முக்கியமான ஸம்பவம் திருமணம், குறிப்பாக ஓர் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் மகிழ்ச்சியான தருணம் திருமணம், திருமணம் ஆன பிறகு உரிய காலத்தில் குழந்தை பிறத்தல் என்பது அதை விட ஆனந்தம், மிகப்பெரிய பங்களா கட்டி அதில் அனைத்து ஸுக போகங்களுடன் வாழ்ந்தாலும் கூட அந்த வீட்டில் இங்குமங்கும் தவழ்ந்து ஓடி விளையாடி, வீட்டை அழுக்காக்கி, விஷமத்தனம் செய்து, மழலைச் சொல் பேசி மகிழ்விக்க சில குழந்தைகள் இருந்தால்தான் அந்த ஸுகத்தை வாழ்க்கையை நன்கு அனுபவிக்க முடியும்,
காலத்தில் திருமணம் நடைபெற்று உரிய காலத்தில் குழந்தை பிறத்தல் என்பது பகவத் கிருபையால்தான் கிட்டும், பலருக்கும் அந்த (ஸந்தான) பாக்யம் கிடைத்தாலும் கூட, ஒரு சிலருக்கு மட்டும் தகுந்த வயதில் திருமணம் நடந்தும் கூட பல காலமாக குழந்தை பாக்யம் கிடைப்பதில்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் பொதுவான காரணங்கள் சில, அவற்றில், தந்தை தனது பெண்ணிற்கு காலத்தில் செய்து வைக்க வேண்டிய (ப்ரதமார்த்தவ சாந்தி மற்றும் கர்ப்பதானம் என்னும்) இரண்டு ஸம்ஸ்காரங்களைச் செய்து வைக்காதது என்பதும் ஒரு காரணம்,
1)ஒரு பெண்ணின் வயிற்றில் கர்ப்பத்தை (குழந்தையை) உறுவாக்குதல், 2)அந்த கர்ப்பத்தை எந்த ஒரு ஆபத்தும் இன்றி பாதுகாத்தல் ஆகிய இரண்டும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளால்தான் கிட்டும், ஒரு மனிதனின் முயற்சியால் கர்ப்பத்தில் குழந்தையை உருவாக்கவோ, அந்த சிசுவை பாதுகாப்பதோ இயலாத காரியம், தெய்வ அருளால் மட்டுமே ஒரு ஜீவனை கர்ப்பத்தில் உருவாக்கவும் பாதுகாக்கவும் முடியும், கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தனது தாய் சாப்பிடும் உணவையே தானும் சாப்பிட்டு வளரும்படி செய்வதும் பகவான்தான். மனித முயற்சி என்பது அதற்குத் துணையாகத்தான் இருக்க முடியும்,
ஆகவேதான் ஒரு பெண் முதன்முதலாக ருதுஸ்னானம் செய்த உடன், அந்தப் பெண்ணிற்கு உடலையும் உள்ளத்திலும் இருக்கும் தோஷத்தை (அழுக்கை) போக்கி அந்தப்பெண்ணின் உடலில் கர்ப்பம் தரிக்கும் தன்மையை ஏற்படுத்தும் விதமாக, பெண்ணின் தந்தை, ப்ரதமார்த்தவ சாந்தி என்னும் ஸம்ஸ்காரத்தைச் செய்து வைக்க வேண்டும் என்கிறார்கள் மஹர்ஷிகள், அதாவது பெண் ருதுவான நாளின் நக்ஷத்ர தேவதைக்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கும் பூஜை ஜபம் ஹோமம் செய்து கலச ஜலத்தை பெண்ணிற்கு அபிஷேகம் செய்து வைக்க வேண்டும், இதற்குத்தான் ப்ரதமார்த்தவ சாந்தி எனப்பெயர். உரிய காலத்தில் இந்த சாந்தியைச் செய்ய இயலவில்லை என்றால் திருமணத்திற்கு முன்பாக இதைச் செய்தபின்னர் பெண்ணிற்குத் திருமணம் நடத்த வேண்டும், இதனால் ஒரு பெண்ணின்உடலில் இருக்கும் தோஷம் விலகுகிறது, அவள் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையை அடைகிறாள் என்பதால் ப்ரதமார்த்தவ சாந்தியை முறையாக நடத்த முயற்சிக்கலாம்.
இவ்வாறே திருமணம் ஆன உடன் முறையாக நடத்த வேண்டிய நிகழ்ச்சி கர்ப்பாதானம் என்னும் ஸம்ஸ்காரம், விஷ்ணுர் யோநிம் கல்பயது முதலான மந்திரங்கள் சொல்லி, ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பிரார்தித்து நடத்தப்படும் கர்ப்பாதான ஸம்ஸ்காரத்தால், ஒரு பெண், தனக்கிருக்கும் (கர்ப்பாசய) தோஷத்தை விலக்கி கர்ப்பத்தில் குழந்தையைத் தாங்கும் சக்தியைப் பெறுகிறாள், தற்காலத்தில் ஒரு சிலருக்கு, முறையாக மந்திரங்கள் சொல்லி சாஸ்திரமுறைப்படி திருமணம் நடைபெற்றாலும் கூட, அதன் பிறகு ஸந்ததி பாக்யத்தைத் தரும் கர்ப்பாதான நிகழ்ச்சி, முறையாக நடத்தாததால், குழந்தை பாக்யம் கிடைப்பதில் பெண் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது, ஒரு சில இடங்களில் கர்ப்பாதானம் நடத்தாமலேயே (ஸீமந்தம் நடத்தி) குழந்தை பிறந்தாலும் கூட, அந்தக்குழந்தையிடம் அறிவு வளர்ச்சி நல்ல குணங்கள் போன்றவை அவ்வளவாக காணப்படுவதில்லை,
இந்த தோஷத்தை விலக்கி காலத்தில் நல்ல குணங்களுடன் ஆரோக்யமாக அறிவு வளர்ச்சியுடன் கூடிய (பல)குழந்தைகள் பிறப்பதற்கும், அந்தக் குழந்தைகள் மூலம் அனைவருக்கும் ஆனந்தம் கிடைப்பதற்கும், பகவத் கிருபையை குறிப்பாக ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளை பெற்றுத்தரும் கர்ப்பாதானம் என்னும் ஸம்ஸ்காரத்தை திருமணம் ஆன பின்னர் நல்ல நாள் மற்றும் பொருத்தமான நக்ஷத்ரம் முஹூர்த்தம் பார்த்து சாஸ்திரப்படி நடத்தலாம், அப்போதுதான் எந்த ஒரு பரிஹாரமும் இன்றி திருமணம் ஆன உடனேயே காலத்தில் ஸந்ததி (குழந்தை)பாக்யம் கிட்டும்,
பிறக்கும் குழந்தையும் அறிவாளியாக தேச பக்தி மாத்ரு பித்ரு பக்தி உள்ளதாகப் பிறக்கும், ஆகவே ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரதமார்த்தவ சாந்தி மற்றும் கர்பாதானம் ஆகிய இரு ஸம்ஸ்காரமும் முறையாக நடைபெறவும், அதன் மூலம் பகவத் கிருபையால் உரிய காலத்தில் நல்ல சுபலக்ஷணமான குழந்தைகள் பிறக்கவும், அந்தக்குழந்தை நல்ல குணங்களுடன் வளர்ந்து நீண்ட ஆயுளுடன் பிரகாசிக்கவும் அத்துடன் அந்தக்குழந்தை குடும்பத்தின் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்
No comments:
Post a Comment