இவ்வுலகில் மனிதராகப் பிறந்ததை ஓர் அரிய நிகழ்வாக எண்ணி, நமது (குழந்தைகளின்) பிறந்த நாளை, முதலாமாண்டு துவங்கி ஒவ்வொரு வருஷமும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம், இது நமது முன்னோர்கள் நமக்குக் காண்பித்தவழிமுறை, மேலும்இது சாஸ்திரப்படி ஸரியானதே, ஆனால் தற்சமயம் ஒரு சிலர் பிறந்த நாளைக் கொண்டாடும் வழிமுறையைக்காணும்போது, பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்ட நாம், அதைக் கொண்டாடும் வழிமுறையை ஸரியாகத் தெரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது,
அதாவது ஒரு சிலர் பிறந்த நாளை ஆங்கிலத்தேதிப்படி கொண்டாடு கிறார்கள், ஆங்கிலத்தேதி என்பது மனிதர்களால் உலக வியவஹார த்துக்காக ஏற்படுத்தப்பட்டு, அவ்வப்போது மாறுதலையும் அடைந்து கொண்டிருப்பதாகும், ஆகவே நம் மஹரிஷிகள் கூறியபடி ஆகாசத்தில் ஸஞ்சரிக்கும் சந்திரன் போன்ற கிரஹங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பிறந்த(தமிழ்) மாதம், பிறந்த நக்ஷத்ரத்தன்று ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளைக்கொண்டாடுவதே சிறந்தது,
மேலும் ஒரு சிலர் தங்கள் (குழந்தைகளின்) பிறந்த நாளை, கடையிலிருந்து வாங்கி வரப்பட்ட(பிறந்தநாள் கொண்டாடுபவர் பெயர் எழுதப்பட்ட சாப்பிடக்கூடாத பொருட்கள் கலந்து செய்யப்பட்ட) கேக் என்னும் உணவுப் பொருளை, உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து(ஆங்கிலத்தில்) பாட்டுப்பாடி, கத்தியை வைத்து கேக்கைத் துண்டாக்கி, (எரிந்து கொண்டிருக்கும்) மெழுகு வத்தியை தீபத்தை வாயால் ஊதி அணைத்துக் கொண்டாடுகிறார்கள், இவ்விதம் பிறந்த நாளைக் கொண்டாடும் வழிமுறையைப் பார்க்கும் போது, இது நம் சாஸ்திரத்துக்கும்கலாசாரத்துக்கும்விரோதமானதோ எனத் தோன்றுகிறது, ஏனென்றால் சாஸ்திரத்தால் சாப்பிடக்கூடாது என நிஷேதிக்கப்பட்ட பொருள் கலந்ததைச் சாப்பிடுதல், எழுத்துக்களை கத்தியால் துண்டாக்குதல், வாயால் ஊதி தீபத்தை அணைத்தல், எச்சில் பார்க்காமல் அனைவரும் ஒருவருக்கொருவர் சாப்பிடுதல் என இவற்றில் பல சாஸ்திர விரோதச் செயல்கள் ஏற்படுகின்றன.
தற்சமயம் பலகுடும்பத்தில் இது ஒரு ஸம்ப்ரதாயமாகவே மாறிவிட்டது, அதுவும் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையின் பிறந்த நாளை இவ்விதம் கொண்டாடினால், மற்ற குழந்தைகளும் எனக்கும் அதே போல் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று கேட்கிறது, அந்தக் குழந்தைக் காகவும் முன்போலவே, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் படுகிறது, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இவ்விதமாகவே பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது சிலகாலத்தில் எங்கள் குடும்பப் பழக்கம் என்னும் சொல்லும்படியாகக் கூட நேரலாம், நாம் செய்யும் இந்தத்தவறு நம் ஸமுதாயத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் செயலாகக்கூட மாறலாம், ஆகவே இவ்விதம் செய்வதையோ செய்பவர்களை ஊக்கப்படுத்துவதையோ தவிர்க்க முயற்சிக்கலாம்,
பிறந்த நாளன்று பலருக்கும் அன்னமிட்டு, உற்றார் உறவினருக்கும் ஏழைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து, (ஆலயங்களுக்குச் சென்று) நமக்கு ஆயுளை அளித்து, நமது கைகள், கால்கள், கண் வாய் போன்ற உறுப்புகளையும் உடலையும் ஆரோக்யமாக வைத்து, நம்மை பாதுகாக்கும் தெய்வங்களை பிரார்த்தனை செய்து, நன்றி கூறி, தன்னை விட வயதில் பெரியோர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதே சிறந்தது,
மேலும் சிரஞ்சீவியாக இன்றும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மார்கண்டேயர் போன்ற மஹரிஷிகளையும் விபீஷணர் போன்ற ஆழ்வார்களையும் ஹனுமான் போன்ற பக்தர்களையும் ஆயுஸ்ஸை வளர்க்கும் ஆயுர்தேவதை போன்ற தேவதைகளையும் நக்ஷத்ர தேவதைகளையும் பூஜைகள் ஸ்தோத்ர பாராயணங்கள் ஹோமங்கள் மூலம் ஆராதித்து பிரார்த்தனை செய்வதே சாஸ்திரப்படி பிறந்த நாள் கொண்டாடும் வழிமுறையாகும். இதுவே சாஸ்திர ஸம்மதமாகும், இவ்விதம்தான் நம் முன்னோர்கள் பலரும் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள், இன்றும் பலரும் இவ்விதமே கொண்டாடி மகிழ்கிறார்கள்,
ஆகவே ஒவ்வொரு வருஷமும் பிறந்த தமிழ் மாதம், ஜன்மநக்ஷத்ரத்தன்று உற்றார் உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து, முன்கூறியபடி தெய்வங்களை ஆராதித்து, சாஸ்திர விரோத மில்லாமல், நமக்கும் நமது ஸமுதாயத்துக்கும் நமது தேசத்துக்கும் பயனளிக்கும் வகையில் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,
No comments:
Post a Comment