உலகம் முழுவதும் பொதுவாக பலராலும் உபயோகிக்கும் ஆங்கில வருஷம் 2011 முடிந்து 2012ஆம் ஆண்டு ஆரம்பமாகிறது, இன்று மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டி, பல பொது இடங்களிலும் பலரது வீட்டிலும் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் நமது கலாசாரத்தை பாதிக்காத முறையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை பலர் கொண்டாடுகிறார்கள், இதனால் பலருக்கும் மகிழ்ச்சி, '
ஆனால் ஒரு சில இடங்களில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மேற்கத்திய கலாசாரத்தைப்பின்பற்றி நமது கலாசாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது,குறிப்பாக நமது ஆலயங்களில் நடு இரவில் நடத்தப்படும் புத்தாண்டு சிறப்பு அபிஷேக அர்ச்சனை போன்ற நிகழ்ச்சிகள் நமது சாஸ்திர முறைப்படியும் கலாசாரப்படியும் அமையவில்லை, நடு இரவில் புத்தாண்டை கொண்டாடும் சிலர், உலகத்தையே ஸ்ருஷ்டி செய்து பரிபாலனம் செய்து வரும் தெய்வங்களும் இந்த புத்தாண்டை (மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டி) நடு இரவில் கொண்டாடவேண்டும் என்று எண்ணி, நீங்களும் இந்த புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று தெய்வங்களை நிர்பந்தப்படுத்தும்விதமாக ஆலயங்களிலும் நடு இரவில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்,
ஆகமம் மற்றும் வைதிகம் ஆகிய இரு வழிகளிலும் செய்ய வேண்டும் என்று விதிக்கப்படாத செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட அகாலத்தில் குறிப்பாக புத்தாண்டு பிறக்கும் நேரம் என்று மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நடு இரவில் ஸுமார் 12 மணிக்கு யோக நித்ரையில் ஆழ்ந்திருக்கும் தெய்வங்களை எழுப்பி, அவர்களுக்கு அபிஷேகம் அர்ச்சனைகள் பூஜைகள் செய்கிறார்கள், இது ஆகம வைதிக முறைப்படி ஸரியானதாகத் தோன்றவில்லை,
ஆகமம் மற்றும் வைதிக மார்கங்களில் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டியதாகக் குறிப்பிடப்பட்ட அபிஷேகம் அர்ச்சனை பூஜை போன்றவற்றை தினஸரி நடைபெறும் பூஜைகளைப்போலவே அந்தந்த காலங்களில் குறிப்பாக பகல் மற்றும் மாலை இரவு நேரங்களில் சிறப்பாக நடத்துவதே சிறந்ததாகும், நிசரர் ரஜனீசரர் என்பதாக தமோகுணம் மேலோங்கும் இரவு நேரங்களில் செயல்களைச்செய்பவர், இரவில் சுற்றித்திரிபவர் என்றெல்லாம் அரக்கர்களுக்குத்தான் பெயர், மனிதர்கள் என்பவர்கள் ஸத்வ குணம் அதிகமாக காணப்படும் ஸூரியன் இருக்கும் பகல் பொழுதில் செயல்களைச் செய்பவர்கள் என்று அரக்கர்களுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு சாஸ்திரங்களில் காணப்படுகிறது, ஆகவே பொதுவாக மனிதர்கள் இரவில் வெகு நேரம் கண் விழித்து முக்கியமான செயல்களை செய்யக்கூடாது, அப்போது மனம் தெளிவாக இருக்காது, எனவே அவ்வாறு செய்யும் செயல்கள் ஸரியானதாக அமையாது,
குறிப்பாக சிவராத்திரி நாளைத்தவிர மற்ற எந்த நாட்களிலும் இரவு ஸுமார் ஒன்பது மணிக்கு மேல் ஆலயங்களிலும், ஏன் வீட்டிலும் கூட அபிஷேகம் அர்ச்சனை பூஜை போன்ற எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் நடத்துவதற்கு ஆகமம் வைதிக சாஸ்திரங்களில் இடமில்லை, சாஸ்திர விருத்தமான செயல்களைச் செய்வது இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் ஏற்படும் நன்மைக்குத் தடங்கலாக அமையலாம். யம் க்ரியமானம் ஆர்யா: ப்ரம்ஸந்தி தம் தர்மமித்யாசக்ஷதே நீ செய்யும் எந்தச் செயலை வேத சாஸ்திரக் கருத்துக்களையுணர்ந்த பெரியோர்கள் இது ஸரிதான், இது தர்மம்தான் என்று ஏற்றுக்கொள்கிறார்களோ, அதுவே தர்மமான ஸரியான செயல் என்கிறார் ஆபஸ்தம்ப மஹர்ஷி,
இன்றைய சூழ்நிலையில் பெரியோர்கள் ஸாதுக்கள் பலரும் இவ்வாறு அகாலத்தில் நடு இரவில் ஆலயங்களில் செய்யும் தெய்வ வழிபாடுகளை ஸரிதான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த லௌகீகமான முறையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்ற சில நிகழ்ச்சிகளை நடத்தும் போது, அவற்றில் சாஸ்திரத்தையும் ஆகமத்தையும் புகுத்தாமல் இருக்கலாம்,
ஆகமம் மற்றும் வைதிக முறைப்படி ஏராளமான பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பற்பல வேத மந்திரங்கள் மூலம் தெய்வ ஸான்னித்யத்தை வரவழைத்து தினஸரி நியமமாக பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் ஆலயங்களிலுள்ள தெய்வத்தின் ஸான்னித்யமானது, இவ்வாறு அறியாமல் ஒரு சிலரால் நடத்தப்படும் (நடு இரவில் பூஜை போன்ற) சில நிகழ்ச்சிகளால் குறைந்து போகலாம், மேலும் இதுவே பிற்காலத்தில் ஒரு சில வருஷங்களில் சாஸ்திர ஸம்ப்ரதாயமாகவும் மாறிவிடலாம்,
ஆகவே நம் முன்னோர்கள் பல காலமாக கட்டிக்காத்து தூய்மையாக பாதுகாத்து வந்த ஆலய பூஜா முறைகளை நம் காலத்தில் மாற்ற முயலக்கூடாது, புத்தாண்டு நாளன்று மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாம் அன்று காலை சூரியன் உதயமான பின்பு ஆலயத்தில் அல்லது வீட்டில் உள்ள தெய்வங்களை வழிபட்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவரும் நம்மை வாழவைக்கும் நமது தேசமும் என்றும் சிறப்புடன் விளங்க தெய்வங்களை ப்ரார்திப்போம் ஸ்ரீ பகவான் நிஸ்சயமாக் இதை நிறைவேற்றி நம்மை ரக்ஷிப்பார்,
No comments:
Post a Comment