மற்றவருக்குக்கொடுக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு எந்த ஒரு ப்ரதிஉபகாரத்தையும் எதிர்பார்க்காமல் ப்ரத்யுபகாரம் செய்ய ஸாமர்த்யமில்லாத மனிதருக்கு செய்யப்படும் தானமே ஸாத்வீக (உயர்ந்த) தானம் (கீதை . அத்.17) என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்,
நாம் கஷ்டப்பட்டு நேர்மையாக ஸம்பாதித்துச் சேமித்த பொருட்களை (நாம் அனுபவிப்பதை விட) மற்றவருக்குத் தந்து அவற்றை மற்றவர்கள் உபயோகித்து மகிழ்வதைக் காண்பதுதான் உண்மையான மகிழ்ச்சி, இதற்குத்தான் தானம் எனப் பெயர். மற்றவரின் பொருளை எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது தானமாகாது.
தகுதியுள்ள பூமியில் ஸரியான காலத்தில் விதைக்கப்பட்ட விதைகளே செடியாக மரமாக முளைத்து பலனைத்தருகிறது , அதைப்போன்றே தகுதியுள்ள மனிதருக்கு தகுந்த நேரத்தில் பொருட்களை தானம் செய்வதே முழுமையான பலனைத்தரும்.
ஒரு சில ஸமயம் நல்ல விதை கிடைத்தும் அதை விதைக்க நல்ல பூமி கிடைக்காது, விலை மதிப்புள்ள வைரம் கிடைத்தாலும் அதை பதிக்க தங்கம் கிடைக்காது, தங்கம் கிடைத்தாலும் அந்த நகையை அணிந்து கொள்ள அவயவங்கள் கிடைக்காது,
அதைப்போன்றே தானத்திலும் ஓர் ஸங்கடமுண்டு, அதாவது தானம் செய்யும் பொருட்கள் இருக்கும்போது அதை பெற்றுக்கொள்ளத் தகுதியான மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள். மனிதர்கள் கிடைத்தாலும் ஸரியான காலம் கிடைக்காது.
தீபாவளி என்பது தேசம் (நம் வீடு) காலம்(பண்டிகை காலம்) பாத்திரம் (உற்றார் உறவினர்கள்) த்ரவ்யம் (பொருட்கள்) ஆகிய நான்கும் ஒன்று சேரும் பண்டிகை.
தைலாப்யங்காத் ஸ்ரீயம் ராஜன் லபதே ஸுர துர்லபாம்
ஸ்நாநாத் கங்காம்பஸி ஸ்நானம் தாநாத் ஸர்வமவாப்நுயாத்
என்பதாக நரக சதுர்தசி (தீபாவளி) நாளன்று எண்ணை தேய்த்து குளிப்பதால் தேவர்களுக்குக் கூட கிட்டாத செல்வமும், அதிகாலையில் ஸ்நானம் செய்வதால் கங்கையில் ஸ்நானம் செய்த பலனும், தனது பொருட்களை தானம் செய்வதால் எல்லாவிதமான பலன்களையும் அடையலாம் என்கிறது ப்ருஹ்ம கைவர்த்த புராணம் 36ஆவது அத்யாயம்.
ஆகவே இந்த தீபாவளித் திருநாளை உற்றார் உறவினருடன் புதிய ஆடை ஆபரணங்களுடன் மகிழ்ச்சியாகக்கொண்டாடி இயன்றவரை நமக்குச் சொந்தமான பொருட்களை மற்றவருக்கு தானமளித்து மற்றவருக்குச் சொந்தமாக்கி கண்டு களித்து எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க ஸ்ரீ பகவான் அருள் புரியட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment